Monday 20 June 2016

#அட்டகத்தி #கலிங்கத்துப்பரணி

படை பெருத்ததால் பார் சிறுத்ததோ
பார் சிறுத்ததால் படை பெருத்ததோ

ஜெயங்கொண்டார் , கலிங்கத்துப்பரணியில் இதைச் சொன்னாலும் சொன்னார் , மேடைக்கு மேடை , பார்த்தாயா தமிழனின் புஜ பல பராக்ரமத்தை என்று கொக்கரிப்பு எங்கும் .

விஷயத்துக்கு வருவோம் . தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னன் , குலோத்துங்கன். அவன்  ஏன் கலிங்கம் மீது போர் தொடுத்தான் என்ற கேள்வி பொதுவாக கேட்கப்படுவதில்லை . Iron Man , Hulk , வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற கற்பனை வீரசாகச படங்களை பார்த்து வளர்ந்த சமூகம்  போரிற்கான விலையை யோசிப்பதில்லை . போர் என்பது ஏதோ , தொடையை தட்டி என் மச்சினிச்சிக்கு மஞ்சள் அரைத்தாயா , என்னை எதிர்க்க உங்களிடம் திராணி இருக்கிறதா போன்ற உப்பு பெறாத கேள்விகளை கேட்பது என்று எண்ணுகிறார்கள் . அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை . நாம் வளரும்பொழுது , நமக்கு கூறப்பட்ட கற்பிதங்கள்  அப்படி . அது தான் அவர்களை நரம்பு புடைக்க பேசும் எவரையும் நம்ப வைக்கிறது , நயமாய் பொய் சொன்னாலும் , உரக்கச்  சொன்னால் அதற்காக உயிரை கொடுக்க வைக்கிறது .

ஆக , குலோத்துங்கன் ஏன் கலிங்கம் மீது போர் தொடுத்தான் , யார் மீது போர் தொடுத்தான் ?

அவன் போர் தொடுத்தது , ஆனந்தவர்மன் சோட கங்கன் மீது. இன்னும் தெளிவாய் கூறவேண்டுமானால் , ஆனந்தவர்மன் சோட கங்கனின் தாய் வழி மாமன் முதலாம் குலோத்துங்கன் . காரணம் , வரி கட்டாதது .

ஆக , இரத்த சம்பந்தம் கொண்ட இரண்டு உறவினர்கள் அடித்துக்கொண்டு , பின்னர் படை பெருத்ததால் பார் சிறுத்ததோ , பார் சிறுத்ததால் படை பெருத்ததோ  என்று உயர்வு நவிற்சி அணி சொட்ட சொட்ட நயமாய் மண்டப கவிஞரை கவி பாட வைத்திருக்கின்றனர் கலிங்கத்துப்பரணி என .

எனது கவலை , அந்த அத்துவான கலிங்க காட்டில் தங்கள் உயிர் நீத்த பெருத்த படை குறித்து , இந்த வரிகளை வீரத்தின் அடையாளமாய் நம்பிக்கொண்டிருக்கும் அண்ணனின் விழுதுகள் குறித்து .

இதை எழுதிய பின் , வரும் பெருத்த பயம் , கீழை கங்க நாட்டின் ஆனந்தவர்மன் சோட கங்கன் சோழ வம்சத்துடன் இரத்த சம்பந்தம் கொண்டிருந்த தகவலை இங்கு பதிந்தமையாலும் , அவன் தான் உலகப் புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தை எடுப்பித்து கட்டினான் என்ற வரலாற்று உண்மையினாலும் .

யாருக்கு தெரியும் . நாளையே தம்பிகளின் தம்பிகள் , நம்மில் இது எத்தனை பேருக்கு தெரியும் - கலிங்கம் ஆண்ட வீர பரம்பரை நம் சோழ பரம்பரை என்று WhatsApp  இல் களமாடினாலும் ஆச்சரியம் இல்லை . அகண்ட பாரதம் போல் அகண்ட தமிழகத்தை வென்றெடுப்போம் என்று இவர்கள் கிளம்பினாலும் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை .

அதுவும் சரி தான் . மெய்நிகர் உலகில், இணையத்தில் போர் செய்ய, புரட்சியை வித்திட எதற்கு வீரமெல்லாம் .

#அட்டகத்தி  #மாமன்மருமகன்சண்டை #கலிங்கத்துப்பரணி


1 comment: